மதுரை: நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி துர்கா குடும்பத்தி னருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, விடா முயற்சியை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாணவி துர்கா, நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மன உறுதியோடு, விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது உறுதி என்று மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தையை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இத்த்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்”
இவ்வாறு கூறியுள்ளார்.