சென்னை:

கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தன்னிடம் இருந்த துப்பாக்கியால், சக நண்பரை சுட்டுக் கொன்ற  மாணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே முகேஷ் என்ற கல்லூரி மாணவன் தனது நண்பன் விஜய் வீட்டிற்கு கேம் விளையாடச் சென்றான். கேம் விளையாடுவதில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விஜய் தன்னிடம் உள்ள துப்பாக்கியால் முகேஷின் நெற்றியில் சுட்டுள்ளார்.

குண்டு பாய்ந்த முகேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழா, அதிர்ச்சி அடைந்த விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்து விஜயின் அண்ணன் அங்கு வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்துடன் முகேஷ்  கீழே உயிருக்கு போராடி வருவதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  முகேஷை வீட்டில் இருந்தோர் குரோம் பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அங்கு செல்லும் வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார்.

இநத் சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  விஜய்யின் அண்ணன் உதயாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், விஜய்யை காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர்.

மேலும், அதிமுக பிரமுகரான ரவி மற்றும் அவரது 2 மகன்கள் அன்புராஜ், அன்பரசு ஆகிய 3 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொன்றனர்.

இந்நிலையில், விஜய் செங்கல்பட்டு நீதி மன்றத்தில் சரண் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.