சென்னை:

ஓ.என். ஜி.சிக்கு எதிராக போராடியதால் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தின் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நில மற்றும் நீர் வளம் பாதிப்பதாகவும், விவசாயம் அடியோடு அழிந்துவிடும் என்றும் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் தங்களை நீக்கிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.