வித விதமான துணிகளையும், புது புது வடிவமைப்பிலும் ஆடைகளை உடுத்துவது மட்டுமே தங்களின் விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த ஆடைகளை வடிவமைப்பதிலும் நிறைய பெண்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்த இளம் பெண்கள் பலர் சமீப காலமாக ஆடை வடிவமைப்பு பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி போன்ற பிரபல கல்லூரிகளில் பயில வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் பங்களிப்புடன் செயல்பட்டுவரும் அப்பரேல் டிரைனிங் அண்ட் டிசைன் சென்டர் (Apparel Training & Design Centre – ATDC) எனும் அரசுத்துறை நிறுவனம் கைகொடுக்கிறது.

எட்டாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில், நான்கு மாத (குறுகிய கால) சான்றிதழ் பயிற்சி முதல் மூன்றாண்டு பட்ட வகுப்பு (தொழிற் பயிற்சி) வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகிறது.

ஒரு காலத்தில் வீட்டு தேவைக்கு மட்டுமே என்று இருந்த தையல் கலை, இப்போது சவால்கள் நிறைந்த அதிநவீன தொழிலாக உருவெடுத்திருக்கிறது. புதிய புதிய நூலிழைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஜவுளித்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது.

அதற்கேற்றவாறு, பேட்டர்ன் மாஸ்டர், பேட்டர்ன் மேக்கர், பேஷன் டிசைன் டெக்னாலஜி, மெர்சன்டைஸர் என்று பல்வேறு விதமான பயிற்சிகளை முறையான கட்டணத்தில் நடத்திவரும் இந்நிறுவனம், ஆண், பெண் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கிறது, தையல் மெஷின் மெக்கானிக் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆண்கள் அதிகளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவியருக்கு குறுகிய கால இலவச பயிற்சி முடித்து ஓராண்டு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்று புதுமையான முன்னேற்றங்களை ஜவுளித் துறை கண்டுவருவதை மனதில் கொண்டு, கணினி மூலம் வடிவமைக்கும் கேட்/ கேம் (CAD  / CAM) பயிற்சி வகுப்புகளும் கற்று கொடுக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் பயிற்சி முடித்த மாணவ மாணவியருக்கு வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுவதோடு, சுயதொழில் தொடங்கவும் ஊக்குவிக்கிறது.


சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையி்ல் பல ஆண்டுகளாக செயல்படும் தனது ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில் அனுபவமுள்ள திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்குவதோடு, குறுகிய கால பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தற்போது தொடங்கி இருக்கிறது.

ஐ.ஐ.டி மற்றும் நைட்ரா (வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம்) ஆராய்ச்சியாளர்கள், ஆடைகளில் துர்நாற்றம் வீசுவதை தடுக்கவும், உடலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையிலும், தண்ணீர் இல்லாமல் சுயமாக சுத்தம் செய்து கொள்ளும் வகையிலும் கூடிய துணி உற்பத்தி குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் நேரத்தில், ஜவுளித்துறை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.