டில்லி:

இந்திய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து அமைதியாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து,  அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்தியாவில் தற்போது தொடர்ந்து  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகிறது. கொலை செய்யப்படுவதும் நடக்கிறது. அதேபோல் சிறுபான்மையின மக்களும் கொல்லப்படுவதும் தொடர்கிறது.

இது போன்ற சம்பவங்களில் பெரும்பாலும் பாஜக கட்சியினருக்கு  எதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சியின் போது டில்லியில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தை வைத்து, அரசை கவிழ்க்கும் அளவுக்கு சென்ற பா.ஜ.க.வின் பிரதமரான மோடி, தனது  ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசாமல் இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மோடியின் இந்த மவுனத்தை கண்டித்து அவருக்கு 637 கல்லூரிகளில் இருந்து  கடிதம் அனுப்பி உள்ளனர். இவற்றில் 200க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர்களுடையது. 5000க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்த கடிதத்தில் ”பிரதமர் மோடி அவர்களே.. நீங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை. முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்தது கூட மயிலிறகால் தடவிவிட்டது போல மென்மையாக இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்”  என்று தெரிவித்துள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் மோடிக்கு இதேபோல் இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது. முன்னாள் இராணுவ வீரர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் சிலர் அந்த கடிதத்தை அனுப்பி இருந்தனர். அதில், சில முக்கியமான வழக்குகளில், விசாரணை அதிகாரிக்கு சரியான சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை, பாலியல் குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.