மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:
மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை கைவிட வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்வர் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுவை சட்டசபையில் எத்தகைய சட்டம் கொண்டு வருவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நாளை விவாதிக்க இருக்கிறோம்.

புதுவையில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவில் மாணவிகள் போராட்ட களத்தில் தங்குவதால் அங்கு பெண் போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரோடியர்மில் திடலில் மழைநீர் தேங்கிய போது மாணவர்கள் போராட்டத்துக்காக அரசு சார்பிலேயே அதனை சீரமைத்து கொடுத்துள்ளோம்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தாமாகவே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். புதுவையில் மாணவர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. எனவே மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.