சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, தமிழக அரசும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு பாடங்களில் சந்தேகங்கள் மாணவ மாணவிகள் கேட்க வரலாம் என அறிவித்தது.  மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அரசு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது அதில் வரும் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிகளுக்கு உடனே  தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று தீவிரமடைந்து இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.