உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வராத நிலையில், இதுபற்றி இப்போது பேசுவது அவசியமில்லாத ஒன்று. காங்கிரஸுக்கு பல்லாக்கு தூக்க வேண்டுமா என கே.என் நேரு பேசியிருப்பது பற்றி அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். தன் நிலைபாட்டை அவர் கூறியிருக்கிறார். அதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதில் மட்டுமே இப்போது எல்லா அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருவதால், தற்போது இந்த விவகாரத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.