சென்னை: சட்டசபையில் தேர்தல் செலவினங்களுக்கு ரூ.102.38 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இந்த மன்றத்தின் முன்வைக்கிறேன். கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசர தேவைகளின் காரணமாக அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் இந்த துணை பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது.

சட்டசபை தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. எனவே முக்கிய செலவினங்களை தற்போது கூறமுடியாது. இறுதி துணை மதிப்பீடுகளில் எந்தவொரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை.

தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.92 கோடி தேவைப்படுகிறது. அதற்காக இந்த துணை பட்ஜெட்டில் ரூ. 102.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 21,172.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது.

அவற்றில் ரூ. 17,790.85 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,381.97 கோடி மூல தனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பின்னர் துணை பட்ஜெட்டுக்கு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.