சென்னை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்திக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று சென்னை வந்துள்ளார். மாலையில் மயிலை ரோட்டரி கிளப் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பதாக முதலில் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, சுவாமி, தமிழக ஆளுநர் வித்யாசாகரை தொடர்புகொண்டு பேசியதாகவும் இன்று இரவு அவரை சந்திக்க  இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்தார். ஆனால் மிகச் சமீபகமாக சசிகலாவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருக்கிறார்.

“ஆளுநர் சசிகலாவுக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்க வேண்டும். தள்ளிப்போடுவது சட்டமீறல்” என்று சசிகலாவுக்கு மிக ஆதரவாக பேசி வருகிறார். தனது கருத்தை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அவர் சென்னை வந்து ஆளுநர் வித்தியாசாகரை சந்திக்க இருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.