சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே சுரங்கப்பாதை கட்டுமானப் பணிக்காக நாளை முதல் 25-ம் தேதி வரை 15 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மூலமாக நடைபெற இருப்பதால் வருகின்ற நாளை முதல் 25-ம் தேதி வரை 15 நாள்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக இவிஆர் சாலை வருபவர்கள் தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை.  சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.
2. முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் முத்துசாமி சாலை வழியாக முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
3. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் ஈவினிங் பஜார் சாலை வழியாக இடது புறம் திரும்பி இவிஆர் சாலை சென்று வலது புறம் திரும்பி முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
4. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில்வே நிலையம் முன்பாக உள்ள  ஸ்டாலின் வையடாக்  மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.
5. வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி இவிஆர் சாலை சென்று வலது பக்கம் திரும்பி முத்துசாமி பாலம் வழியாக வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
6. இவர்கள் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக்   மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.
7. முத்துசாமி சாலையிலிருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.
இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.