சென்னை: கொரோனா விடுமுறை நாட்களை, புதியப் பாடத்திட்ட புத்தகங்களைப் படித்து, பயிற்சி பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், ஒரு மாதமாக விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள் சார்பில், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, ‘வீட்டில் இரு; விலகி இரு’ என்ற விதிகளைப் பின்பற்றி, ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரை கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், விடுமுறை காலத்தை, அடுத்த கல்வி ஆண்டுக்கான முன்தயாரிப்பு காலமாக எடுத்து, கற்பித்தல் பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்க வேண்டும். இதுகுறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அதில், அனைத்து ஆசிரியர்களும் இந்த விடுமுறை காலத்தில் தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்துக்கான பாடங்களை படித்து, எளிதான கற்பித்தலுக்கு தயாராக வேண்டும்.

கடந்த கல்வியாண்டில், புதிய பாடப் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை என பல ஆசிரியர்கள் கூறிய நிலையில், தற்போது கிடைத்துள்ள நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, வரும் கல்வி ஆண்டில் மாணாக்கர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.