டெல்லி: டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்த படியே உள்ளது. இந் நிலையில், டெல்லியில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதை பார்க்க முடிகிறது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதால் வேகமாக பரவி வருகின்றது. எனவே அதை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார்.

தீபாவளியை முன்னிட்டு சில நாள்களாக டெல்லியில் உள்ள சந்தைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் சென்று வருகின்றனர். ஆகையால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, கொரோனா 3ம் அலை வீச தொடங்கியுள்ளது என்று  முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.