டெல்லி:

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அனுமதி அளித்த உச்சநீதி மன்றம் பிணைத் தொகையாக ரூ.10 கோடி உச்சநீதி மன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிட்டு உள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக வகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் உள்ளன.  வழக்குகள்  காரணமாக அவர்  வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழில் நிமித்தமாக பிரான்ஸ் மற்றும் லண்டன்  செல்ல உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் எம்.ஆர். நீதி சூர்யா காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்த நீதிபதிகள், அதற்கு பிணைத்தொகையாக ரூ.10 கோடி உச்சநீதி மன்ற பதிவாளரிடம்  செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.