ஐதராபாத்: தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பட்டாசு விற்பனையாளர்களின் கூட்டமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்தனர்.

தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி அளித்து அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க தடைக்கோரி வழக்கறிஞர் இந்திரா பிரகாஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து இருந்தது.