டில்லி,

ரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.வின் அஸ்வினி உபாத்யாயா என்ற மூத்த வழக்கறிஞர் கடந்த நவம்பர் மாதம்  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல் வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து,  குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 2ந்தேதி நடைபெற்ற வழக்க எ விசாரணையின்போது,  குற்ற வழக்குகளில் அரசியல்வாதி கள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு  உத்தரவிட்டனர்.

அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் களை அரசியலில் இருந்து ஆயுள் முழுக்க தகுதி நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக கூறினார்.

ஆனால்,  தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ் நாள் தடை விதிக்கலாம் என்றும், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தால் மட்டும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று கூறி குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கலின் போது தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் நாட்டில் இப்போது எம்.பி., எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மீது 1,581 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை செய்யலாம்  என்று அரசுக்கு யோசனை தெரிவித்தனர். அதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில்,   எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்க, 7.8 கோடி ரூபாய் செலவில், 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1ம் தேதிக்குள் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

இதன் காரணமாக இனிமேல் கிரிமினல் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கொட்டம் அடக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.