டில்லி

சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார்.

 

தற்போது டில்லியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.    இதில் பல முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் பல கோரிக்கைகள் எழுப்பி வருகின்றனர்   அவ்வகையில் மதிமுக  பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் வைகோ, “மாநில உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் மன நிறைவு அடையவில்லை என்றால் அல்லது  தீர்ப்பு தவறானது எனக் கருதினால், உச்சநீதிமன்றத்தை நாடலாம் என இருந்த போதிலும் தென்னிந்திய மக்கள், உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை.  இதற்கு முக்கிய காரணம் மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்கறிஞர்களின் கட்டணம் போன்றவை ஆகும்.

இதனால்  ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்சநீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.  மொத்தத்தில்  உச்சநீதிமன்ற மேல் முறையீடுகளில், வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக, கூடுதலான வழக்குகள், தென் இந்தியாவில் இருந்து வருகின்றன. ஆகவே, உச்சநீதிமன்றத்தில் நிரந்தரக் கிளையைத் தென்னிந்தியாவில் நிறுவினால் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும்  அத்துடன். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்கறிஞர்களுக்கும் வசதியாக அமையும்.

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.  கடந்த 2018 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி  கணக்கின்படி, தற்போது உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.  இந்த பிரச்சினைகளைத்  தீர்க்கத் தக்க நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற அதிகாரத்தின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேசவேண்டியதோ கருத்துகளைக் கேட்க வேண்டியதோ இல்லை. அவரே தாமாக முடிவெடுத்துச் செயல்படலாம். இருப்பினும் அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் எனவே, உச்சநீதிமன்றக் கிளையைத் தென் இந்தியாவில், அதாவது சென்னையில் நிறுவிட வேண்டும்.”என பேசி உள்ளார்.