டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சசர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை 5ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கில், சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது காவல் 3 முறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  கடந்த 13 நாட்களாக சிபிஐ அவரை காவலில்  விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத் தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிதம்பரதை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், சட்டப்படி அவரை நீதிமன்ற காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதால், பாதுகாப்பு கருதி வீட்டுச்சிறையில் வைக்கலாமே தவிர திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் , வீட்டுச் சிறை என்பது அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பு என்று சுட்டிக்காட்டினர். ஏன் இந்த கோரிக்கைகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் சிதம்பரம் தரப்பினருக்கு கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையையும் வரும் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.