டில்லி,

தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்ஸி, கோலா நிறுவனங்கள் தண்ணீரை எடுக்க தடை விதிக்க கோரிய மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

ஏற்கனவே கடந்த மாதம் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்தது.

இதன் காரணமாக தாமிரபரணியில் இருந்து அயல்நாட்டு குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி நிறுவனங்கள் மீண்டும் தண்ணீர் உறிஞ்ச தயாராகி உள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதியாகும். தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் தமிழகத்திலேயே உற்பத்தியாகும் ஒரே ஆறும் இதுதான். நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முப்போகம் விளையும் விளைநிலங்களுக்கு நீராதாரமாகவும் இந்த ஆறு பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் கோகோ கோலா நிறுவனத்துக்கு, குடிநீர் மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க 30.1.2004-ல் 31.54 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இந்நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 37.50 ரூபாய்க்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனால், “நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். பிசான பருவ சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும்.

எனவே, பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவன்ங்களுக்கு குளிர்பானம் மற்றும் மினரல் வாட்டர் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கக் கூடாது என தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு பரமசிவம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்ஸி, கோகோகோலா நிறுவனங்களுக்கு தடை கோரி ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.அப்பாவுவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்கள் சென்னை உயர்நீதி மன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  தாமிரபரணியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம் கோலா, பெப்சி நிறுவன தரப்பு வாதிட்டது.

இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை இல்லை என்று தீர்ப்பு கூறியது.

மதுரை உயர்நீதி மன்ற கிளையின் தடை நீக்கத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.