டில்லி,

முதுநிலை மருத்துவ மேற்படிபு குறித்த அரசாணையை  சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

இதன் காரணமாக முதுநிலை மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.

கிராமப்புறங்கள், புறநகர் பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அரசாணையை ஜூன் மாதம் 17ந்தேதி  ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள்  தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து, அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நடத்த அனுமதி அளித்தது.

கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும்.முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கவுன்சிலிங் செல்லும்.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடைக்கு தடை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் விசாரணையை  செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது.