டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்துள்ள தால், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை நீடித்து வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சுமார் 2 மாதங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமின் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டில்லி உயர்நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்சநீதி மன்றத்தில் சிதம்பரத் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. பி சிதம்பரம் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யப்படாவிட்டால் மற்றும் ரூ .1 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தில் விடுவிக்கப்படலாம் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 16ந்தேதி சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  24ந்தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் காரணமாக, சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து சிதம்பரம் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.