டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.   அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்திலும் 2018-ஆம் ஆண்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தமிழகஅரசின் தீர்மானத்துக்கு கவர்னர் செவிசாய்க்க மறுத்து வருகிறது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில், தமிழகஅரசின் தீர்மானத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் நேற்றை விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில், ஆளுநர் இன்னும் 3, 4 நாளில் முடிவை அறிவிப்பார் என உறுதி கூறப்பட்டது. இதையடுத்து,  பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கை 2 வாரத்துக்க தள்ளி வைத்தது.