டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக  உள்பட 4 கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு குறித்து பதில் தெரிவிக்க  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு  திமுக காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சத்தீஸ்கர் கிசான் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, மனு தொடர்பாக   4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
முன்னதாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் 3 வேளாண் சட்டங்களுக்கு சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ்குமார் ஜா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.