மும்பை: இந்திய டி-20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார், கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், கடந்த ஐபிஎல் தொடரில் 480 ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம்பெறவில்லை என்றவுடன், முன்னாள் வீரர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டனர்.

இந்நிலையில், அவருக்கு இடம் கிடைத்துள்ளது குறித்து, சில வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்து, வாழ்த்து கூறியுள்ளனர்.

ஹர்பஜன் சிங் கூறியுள்ளதாவது, “இறுதியாக இந்திய அணியில் சூர்யகுமார் இடம் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “இதற்காகத்தான் காத்திருந்தீர்கள். உங்கள் காத்திருப்பு முடிந்துவிட்டது சூர்யகுமார். வாழ்த்துகள்” என்றுள்ளார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய அணியில் முதல்முறையாக இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேஷியா, இஷான் கிஷன் ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களின் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.