சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு கொரோனா .. விசாரணையில் பாதிப்பு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு மர்ம முடிச்சுக்கள் விழுந்துள்ளன.

ஆரம்பத்தில் இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்தனர்.

இப்போது, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணையில் சேர்ந்துள்ளன.

நான்கு பிரிவுகள் விசாரணை நடத்தினாலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை மட்டுமே முழு வீச்சில் நடந்து வருகிறது.

அவர்கள், சுஷாந்தின் காதலி உள்ளிட்ட 18 பேரை இதுவரை கைது செய்து தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடியை மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு விசாரணைக்காக நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவு ( எஸ்.ஐ.டி) அதிகாரிகள் அழைத்திருந்தனர்.

அவரும் காலை 10 மணிக்கு ஆஜராகி இருந்தார்.

ஆனால் விசாரணை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சற்று நேரத்துக்கு முன்பாக பரிசோதனை அறிக்கை ரிசல்ட் வந்திருந்தது.

இதனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் விசாரணை நடத்துவதாகக் கூறி, ஸ்ருதியை அலுவலர்கள்  அனுப்பி வைத்தனர்.

சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்  விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

-பா.பாரதி.