டில்லி

தீபாவளிப் பரிசாக மருத்துவ சிகிச்சைக்கான விசாக்களை வெளிநாட்டினருக்கு வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறி உள்ளார்.

நேற்று வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.  இதையொட்டி அனைத்து அரசியல் பிரமுகர்களும், அமைச்சர்களும் தீபாவளி வாழ்த்துச் செய்திகளை அளித்துள்ளனர்.   மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதே போல ஒரு வாழ்த்துச் செய்தியை அளித்துள்ளார்.

சுஷ்மா தனது வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.  வெளி நாட்டினர் பலர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்ள விசா தேவை எனக் கோரி உள்ளனர்.  அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக மருத்துவ விசாக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பலரும் விசாவுக்காக மனு அளித்துள்ளனர்.  அவர்களில் பாகிஸ்தான் நாட்டினர் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.   ஏற்கனவே இது போல் பல பாகிஸ்தானியருக்கு மருத்துவ விசா கிடைக்க அமைச்சர் சுஷ்மா உதவியுள்ளார்.