டில்லி

டிவிட்டரில் தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ப்ளாக் செய்துள்ளார்.

மோசுலில் இருந்து கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது தெரிந்ததே. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடத்தப்பட்ட உறவினர்களிடம் அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் மீட்கப்படுவார்கள் என பல நாட்களாக உறுதி அளித்து வந்தார்.  அதன் பிறகு அவர்களின் மரபணு மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்ட போதும் விவரம் எதுவும் கூறாமல் இறுதியாக பாராளுமன்றத்தில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தந்ததாக அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.   அந்த சமயத்தில் ராஜ்யசபை உறுப்பினரும் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான பிரதாப் சிங் பாஜ்வா, “நான் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ஏற்கனவே கேள்வி மேல் கேள்விகள் கேட்டுள்ளேன்.

எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் என்னை டிவிட்டரில் சுஷ்மா ப்ளாக் செய்துள்ளார்.  அவர் என்னை கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் தேதி ப்ளாக் செய்தது எனக்கு தற்போது தான் தெரிய வந்தது.   நான் அவரை என்ன தொந்தரவு செய்தேன் ?  பாராளுமன்ற உறுப்பினர் என்னும் உரிமையில் எனது மக்கள் நலனுக்காக அமைச்சரை கேள்வி கேட்கக் கூடாதா?”  என வினவி உள்ளார்

 

சாதாரணமாக தனி மனிதர்கள் சக டிவிட்டர்களை ப்ளாக் செய்வது வழக்கமான ஒன்று.   ஆனால் ஒரு துறையின் அமைச்சர் தன்னிடம்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் குறைகளை கேள்வியாக கேட்கும் போது ப்ளாக் செய்வது முறை அல்ல எனவும் இது அமைச்சரின் புகழுக்கு ஒரு களங்கம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.