சென்னை:

மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்து காம்தாபூரை பிரித்து தனி நாடு கேட்கும் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர்ப்ப தாஸ் என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

தனது நண்பர்களை திடீரென மிரட்டிய அவர், தான் தீவிரவாதி என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவரை அண்ணா நகர் போலீஸார் கைது செய்தனர். சிறப்பு விசாரணை பிரிவும் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தாஸின் போனை வாங்கி போலீஸார் சோதித்தபோது, கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற தாஸின் படம் இருந்தது.

இதனையடுத்து நடந்த தீவிர விசாரணையில்,கிரேட்டர் கூச்பேஹார் விடுதலை அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தது தெரியவந்தது.

மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்த காம்தாபூரை பிரித்து தனி நாடு கேட்கும் தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மேற்கு வங்க போலீஸாருக்கு சென்னை போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.