சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அரசு சம்பளம் மற்றும் அரசின் சலுகைகளை பெற்று வரும் நிலையில் தங்கள் வீடுகளில், டியூஷன் நடத்துவதாக புகார் எழுந்தது. இதற்கு மாணவர்களிடம் மாதந்தோறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மேலும், சில ஆசிரியர்கள் தனியார் டியூஷன் சென்டர்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டு பாடம் நடத்துவதும் தெரியவந்துள்ளது. அதனால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்கள், 10ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களும் வகுப்புகளில் சரிவர பாடம் நடத்துவது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்களிடம் டியூஷன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாதம் ஆயிரம் முதல்- 2 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறைக்கு சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் டியூஷன் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி டியூஷன் எடுக்க கூடாது என்ற விதியை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.