தஞ்சாவூர்,

ஞ்சாவூர் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய காவல்துறையினர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் காரணமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் கதிராமங்கலம் மக்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கதிராமங்கலம் மக்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காதவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், பேச்சு வார்த்தைக்கும் வரமாட்டோம் என்று கூறி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்களை சந்திக்க சென்ற காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்பட 6 பேரையும் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கதிராமங்கலம் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.