இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் பிஸியாகியுள்ளனர் .

பல்வேறு திரையுலகப் பிரபலங்களை விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த வீடியோவினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு ட்விட்டர் கணக்கில் தமன்னா பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

“நம்மால் கோவிட்-19 வைரஸை எளிதாக ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத் தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில் மட்டுமே இருக்கிறது. அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம்.கொரோனா வைரஸை ஒழிப்போம்”.என பேசியுள்ளார்.