தமிழ்ப்படங்கள் பல டப்பிங்க் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்றாகும்.    பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழில் வெளி வந்த உடனேயே டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகிறது.   அது மட்டுமின்றி வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்களும் டப் செய்யப்படுகின்றன.

அவ்வழியில் நயன்தாரா நடித்த தமிழ்ப்படமான அறம் டப் செய்யப்பட்டு நாளை வெளியாக உள்ளது.   இதற்கு தெலுங்கில் கர்த்தவ்யம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.    இதற்கு முன்பு கர்த்தவ்யம் என்னும் பெயரில் 1990 ஆம் ஆண்டு ஒரு ஒரிஜினல் தெலுங்குப் படம் வெளியானது.   விஜயசாந்தி காவல்துறை அதிகாரியாக நடித்த அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘வைஜயந்தி ஐபிஎஸ்’ என்னும் பெயரில் தமிழில் வெற்றி பெற்றது.

இந்த புதிய கர்த்தவ்யம் (அறம்) படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.    பழைய கர்த்தவ்யம் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்தது போல் இந்தப் படத்தில் நயன்தாரா ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.