டெல்லி:

“சமஸ்கிருதத்தை விட  4500 ஆண்டுகள் தொன்மையான மொழி  தமிழ்” என்று மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார்.

நாட்டில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, “சமஸ்கிருதம்தான்  நாட்டின் தொன்மையான மொழி. என்றும், அது விஞ்ஞான மொழியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறினார்.

அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆ.ராசா   “இந்தியாவில் திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு என்று இரண்டு கொள்கை சிந்தனைகள் உள்ளன. தமிழ் உள்பட திராவிட மொழிகளுக்கும், சம்ஸ்கிருத மொழிக்கும் சிறப்பு இயல்புகள் உள்ளன. அதனால் எந்த மொழியும் வேறு மொழி மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கூறியவர், இதற்காக  நாங்கள் வட மாநிலங்களின் மொழிகளை எதிர்க்கவில்லை என்பதையும் தெளிவுபடத்தினார்.

தொடர்ந்து பேசியவர்,  சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் வரவில்லை என்றும், திராவிட மொழிகளில் தமிழ் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது, இதற்கு  ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன, ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று தெளிவுபடுத்தினார்.

மத்தியஅரசு சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டியவர், இன்று சமஸ்கிருதம் அழிந்து வருகிறது. அதனை ஊக்கப்படுத்துவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, மற்ற பிராந்திய மொழிகளுக்கு வெறும் 12 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏன் இந்த பாகுபாடு?” என்றும்  கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி. ஆ.ராஜாவின் அதிரடி பேச்சு மக்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக எம்.பி.க்கள் ராஜாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.