ராமண்ணா வியூவ்ஸ்

கேரள "நாகரீக" ப்ரஸ்மீட்
கேரள “நாகரீக” ப்ரஸ்மீட்

 
தோழி அழைத்ததால் காஃபி ஷாப் சென்றிருந்தேன்.  விதவித காஃபியில் ஏதை செலக்ட் செய்யலாம் என்று மெனு கார்டை வைத்துக்கொண்டு அவள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க..  பக்கத்தில் “ஹாய்..” என்ற மெல்லிய குரல் கேட்டது.
சீனியர் புகைப்படக்கலைஞர்.. ஸ்ரீராம் செல்வராஜ். பேசிக்கொண்டிருக்கையில் நம் தமிழ்நாட்டில் நடக்கும் பிரஸ் மீட்.. அதாவது பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி பேச்சு வந்தது.
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் ப்ரஸ்மீட் என்றாலும் ரணகளமாகத்தான் இருக்கும்.  பத்திரிகையாளர்கள் மட்டும் கூடியிருக்கும் அந்த  அறையின் சிறு மேடையில் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.கள் ஏறி அமர்வார்கள்.
அவ்வளவுதான். கையில் கேமராவுடன், மேடையை சுற்றிக்கொள்வார்கள் போட்டோகிராபர்கள்.  அவர்களுக்குள்ளே தள்ளு முள்ளு நடக்கும். “ஹேய்.. ஓய்..” என்கிற அதட்டல் குரல்களுக்கும் குறைச்சல் இருக்காது.
அடுத்ததாய், அரங்கமே அதிரும்படியாக, “யேய்.. போட்டோகிராபர்ஸ்..” என்று சில கூக்குரல்கள் வரும். இந்த குரலுக்குச் சொந்தக்காரர்கள்,  டிவி கேமராமேன்கள்.
ராமண்ணா
ராமண்ணா

பதிலுக்கு, “இருப்பா..” என்று இங்கிருந்து சில குரல்கள் ஒலிக்கும். இந்த களேபாரம் ஒருவழியாக முடிந்து, ரிப்போர்ட்டர்களின் பணி துவங்கும். அதாவது கேள்விகள் கேட்பது.
ஒரே நேரத்தில் பலரும் கூக்குரலிடுவார்கள். மைக் வைத்திருப்பவர் மட்டுமல்ல.. இன்னும் சிலரும் அதே நேரத்தில் கேட்பார்கள். பெரும்பாலும் ஒரு சிலரே மொக்கை கேள்விகளை தொடர்ந்து கேட்டு, பிறர் கேள்விகேட்க முடியாதபடி செய்வார்கள்.
இதுபற்றித்தான் நானும் புகைப்படக்காரர் ஸ்ரீராம் செல்வராஜும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது மனதை நெருடியது…
“சமீபத்தில் ஒரு அஸைண்மெண்ட்டுக்காக கேரளா போயிருந்தேன். அதன் ஒரு பகுதியாக ப்ரஸ்மீட் ஒன்றுக்கும் செல்ல வேண்டியிருந்தது.  தமிழ்நாட்டில் நடக்கும் பரஸ்மீட்களை அட்டெண்ட் செய்து அலர்ஜியே ஏற்பட்டிருந்தது எனக்கு. ஆகவே அந்த ப்ரஸ்மீட்டையும் தவிர்க்க நினைத்தேன்.
என்னை அழைத்துச் சென்ற பத்திரிகை நிருபர் வற்புறுத்தியதால் தவிர்க்க முடியாமல் சென்றேன். ஆகா.. ஆச்சரியம்..!
சம்பந்தப்பட்ட வி.ஐ.பி. மேடைக்கு வந்தவுடன், , டிவி கேமராமேன்கள் வந்து படம் எடுத்தார்கள்.  சில நிமிடங்கள்தான். பிறகு தங்கள் கேமராவை பின்புறம் தள்ளி வைத்து ஒளிப்பதிவை தொடர்கிறார்கள். இடையே பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தார்கள்.
அடுத்து கேள்வி நேரம். அதுவும் அமைதியாக நடந்தது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அறிவார்ந்த கேள்விகள். அதுவும் அடுத்தவர் கேட்கும்போது  குறுக்கிடாமல், அமைதியாக கேட்கிறார்கள். சிறப்பாக, அமைதியாக ப்ரஸ் மீட் முடிந்தது..” என்ற ஸ்ரீராம் செல்வராஜ், “கேரளாவில் ஆட்டோ டிரைவரில் இருந்து பத்திரிகையாளர்கள் வரை நாகரீகமாக நடந்துகொள்கிறார்கள். இங்கே அப்படி இல்லையே..” என்றார் வருத்தத்துடன்.
எனக்கும் அந்த வருத்தம்தான் மனதை நெருடிக்கொண்டிருக்கிறது.