சென்னை:

மிழகத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத விலக்கு அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும்  2022ம் ஆண்டு வரை சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் இருந்து கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும்  தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது  அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டது.

தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2015-16ம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாட தேர்வு எழுத 2022ம் ஆண்டுவரை விலக்களித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.