சென்னை:
திருக்குறளை ராணுவத்தினரிடயே சுட்டிக்காட்டிய  பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’  பாடத்தை சிபிஎஸ்இ.ல் இருந்து நீக்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால்,  நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்  என்று கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால், நடப்பாண்டில் பாடப்புத்தகங்களில் சுமார் 30 சதவிகித பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட  அறிவிப்பில்,  30 %  பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது. அதில்,  தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில்,
இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற #CBSE பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் #NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்!
என்று தெரிவித்துள்ளார்.