சென்னை: தமிழக சட்டமன்றதேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மீண்டும்  ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறினார். அதன்படி, இம்மாத இறுதியில் தமிழக சட்டமன்ற தேர்தல் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் கானொலி காட்சி மூலம் நாளை மாலை 4 மணிக்கு சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார்/ அப்போது, வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.