11tvk
சென்னை:
நாளை நடைபெற இருக்கும் தமிழக முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்து உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு விவசாய சங்கங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் ஆகியோரின் ஆதரவுடன் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு பிற அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான எல்லா அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவும், நடுவர்மன்ற உத்தரவின்படி தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும்,
தமிழர்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும்,
தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு, இழப்பீடுகள் வழங்கிட வற்புறுத்தியும்,
காவேரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்திட வற்புறுத்தியும்,
மொத்தத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் காக்கப்படுவதன் மூலம்
தமிழகத்தின் நலன் காக்கப்பட மத்திய – மாநில அரசுகளை வற்புறுத்தி நாளை (16.9.2016) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் முழு ஆதரவு தந்து இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.