சென்னை:

நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் தற்கொலை பயங்கரவாதி வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். காயமடைநத்வர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர குண்டு வெடிப்புக்கு  பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. பலியான 44 வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

வீரமரணம் அடைந்த சுப்பிரமணி என்பவர்,  தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர். மற்றொரு வர், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன். இவர்களது உடல்கள் இன்று நண்பகல் டில்லியில் இருந்து தனி விமானம் தமிழகம் வந்தடைந்துள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, தற்போது, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் என்றும் அறிவித்து உள்ளது.