சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக  வரும 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 8 மாதங்களை கடந்துள்ள நிலையில், 90 சதவிகித அளவுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு மற்றும் தளர்வுகள் காரணமாக மாதந்தோறும், ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, அதன்பிறகே முடிவை அறிவித்து வருகிறார்.

அதன்படி, டிசம்பர் மாதம் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனிடையே வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இதையடுத்து, தமிழக முதல்வரும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  அப்போது,  டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு விவாதித்து முடிவு அறிவிப்பார் என தெரிகிறது.