சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,  நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நிதி தாருங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே நிதி கோரி தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தொழிலதிபர்கள், முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை தமிழக அரசு நாடுகிறது என கூறி உள்ளார்.

இதுகுறித்து  அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, நிதி உதவி மற்றும் அத்தியாவசிப் பொருட்களை விலையில்லாமல் வழங்கியுள்ளது. ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் மற்ற மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோரையும் பாதுகாக்கும் பொருட்டு நிவாரணம் வழங்கியும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் காவல்த்துறை அன்பர்கள், தூய்மைப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தன்னலம் பாராமல் களப்பணியும், மருத்துவப் பணியும் ஆற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்களுக்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று பலர் மனம் உவந்து தங்களது பங்களிப்பினை தாராளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.  சிறுவர், சிறுமியர், மாணாக்கர்கள் தங்களால் இயன்ற சிறிய பங்களிப்பை பெரிய மனதுடன் வழங்கி தங்களது கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினை திடமாக எதிர்கொண்டு சமாளிக்க, வருங்காலங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.  இந்நடவடிக்கைகளை செம்மையாக செய்ய, தொழில் அதிபர்கள், முன்னனி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தமிழ்நாடு அரசு நாடுகிறது.

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே, இப்பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

i. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.

 https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html 

ii. Electronic Clearing System (ECS) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம். 

வங்கி பெயர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை – தலைமைச் செயலகம், சென்னை – 600 009
சேமிப்புக் கணக்கு எண் – 117201000000070
IFS Code – IOBA0001172
CMPRF PAN – AAAGC0038F

மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெயர்
செலுத்தும் தொகை
வங்கி மற்றும் கிளை 
செலுத்தப்பட்ட தேதி
நிதி அனுப்பியதற்கான எண்
தங்களது முழுமையான முகவரி
இ-மெயில் விவரம்

வெளிநாடு வாழ்  மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:-

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
கரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
நிதித்துறை, தமிழ்நாடு அரசு, 
தலைமைச் செயலகம், 
சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி dspaycell.findpt@tn.gov.in

நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G) ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு. 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50ன் கீழ் விலக்களிக்கப்படும் (இந்திய உள்துறை அமைச்சக ஆணை எண்.F.No.II/21022/94(1124)/2015-FCRA-III, நாள் 22.12.2015.)

பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.