சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக  தலையில் பச்சை துண்டைக்கொண்டு தலைப்பாகை கட்டிக்கொண்டு,  சட்டசபைக்கு வருகை தந்தனர். அவர்களின் வித்தியாசமான வருகை பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்த தொடர் முழுவதையும் புறக்கணிக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சபையில் பங்கேற்க வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பச்சை வண்ணத்திலான முண்டாசு (தலைப்பாகை) கட்டிக்கொண்டு சபைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சக எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.