நெட்டிசன்:
சமூக ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS )    அவர்களது முகநூல் பதிவு:
இன்றைய தமிழகம் அமைந்து இன்றோடு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. மொழிவாரி மாநிலம் அமைந்ததில் நாம் இழந்த பகுதிகள் அதிகம். பெற்றது திருத்தணி ,நெல்லை மாவட்டம் செங்கோட்டை ,கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே இன்றைய நாள் கொண்டாடவா? சிந்திக்கவா தெரியவில்லை !!
இதுகுறித்தான வரலாறும் , நாம் பெற்றவற்றையும் இழந்தவை குறித்தும் என்னுடைய கட்டுரைகளை பிரபல இதழ்கள் பல   வெளியிட்டுள்ளன.

கேரள கொண்டாட்டம்
கேரள கொண்டாட்டம்

இந்நாளில் அமைந்த கேரளம் நவ கேரளம் , வஜ்ரம் கேரளம் ,ஐக்கிய கேரளம் என்று கொண்டாடுகிறது . கர்நாடகம் அகண்ட கர்நாடகம் என்று கொண்டாடுகிறது
ஆந்திரத்தில்  “விசாலம் ஆந்திரம்” என்று அரசே விழா எடுக்கிறது !! மகாராஷ்டிரம் சம்யுக்தா மஹாராஷ்டிரா என்று ராஜ்ய விழாவாக எடுக்கின்றது !  குஜராத் மகா குஜராத் என்று கொண்டாடுகிறது .
ஆனால் தமிழகம் மட்டும் இதை குறித்து வாயை திறப்பது இல்லை. ஆம், தமிழக உதயத்தை.. தமிழ்நாட்டை.. தமிழ்நாடே மறந்துவிட்டதோ?
கடந்த 2006 ல் தமிழ்நாடு 50 என்று அடியேன் விழா எடுத்து அந்நிகழ்ச்சியில் இதுகுறித்தான எனது நூலும் வெளியிடப்பட்டது . எல்லை போராட்ட தியாகிகளை வாழ்த்தவும், வணங்கவும் நாம் இழந்த பகுதிகளை சிந்திக்கவும் இந்நாளை விளிப்புணர்வு நாளாக கூட கடைப்பிடிக்க தமிழகம் தயங்குவது வேதனையும் கோபத்தைத்தையும் தருகின்றது .
திருத்தணியை மீட்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் அவர்கள், தலைமையில் பங்கேற்ற தியாகிகள் மங்கழகிளார் , விநாயகம், ரஷீத்,  .மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால்,தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் என பலர்.
கே.எஸ்.ஆர். எழுதிய புத்தகம்
கே.எஸ்.ஆர். எழுதிய புத்தகம்

நெல்லை செங்கோட்டையை இணைக்க போராடிய சட்டநாத கரையாளர்.
அதேபோல் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகிகளான மார்ஷல் நேசமணி , பி எஸ் மணி ,வக்கீல் பி ராமசாமி பிள்ளை, சிதம்பரநாதன் , குஞ்சன் நாடார் , ரசாக் , லூர்தம்மாள் சைமன் , நூறு முகமது ,பொன்னப்ப நாடார் , வக்கீல்சி.கோபாலகிருஷ்ணன் ,
தாணுலிங்கம் நாடார் , கொடிக்கால் , சாம் நத்தாணியல் , காந்திராம், சிவ தாணு பிள்ளை , நெல்சன் ,மத்தியாஸ் ,சிதம்பரம் , டி டி டானியல்,  நெய்யூர் சிங்கராய நாடார் என பலர்.
புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களான அருளப்பன் நாடார், வண்ணான்விளை வீடு, பைங்குளம் கிராமம், புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
திரு. என். செல்லைய்யா பிள்ளை, (செக்காலை) ஆர் சி.கிழக்குத்தெரு, புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.திரு. எஸ். முத்துசுவாமி நாடார், நாயக்கம் முள்ளுவிளைவீடு, சடையன் குழி, கிள்ளியூர் அஞ்சல், விளவங்கோடு வட்டம்.திரு. எ.பீர்முகமது, புதிய வீடு, அம்சி, தேங்காபட்டணம்அஞ்சல், விளவங்கோடு வட்டம்.திரு. முத்து கண்ணு நாடார், புதுக்கடை அஞ்சல்,விளவங்கோடு வட்டம்.
தொடுவட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களான திரு. எஸ். ராமைய்யன், மேக்கன்கரை, ஆயிரம் பிறைபுத்தன்வீடு, நட்டாலம், விளவங்கோடு வட்டம்.
திரு. எ. பொன்னைய்யன்நாடார்,  அணைக்கரை,தேமானூர், ஆற்றூர், செங்கோடி அஞ்சல், கல்குளம் வட்டம்.  திரு. எம். பாலைய்யன்  நாடார்,  கொச்சுக் காரவிளை, மணலி, சாரோடு், தக்கலை அஞ்சல், கல்குளம் வட்டம்.  திரு. எஸ் குமரன் நாடார், கோடிவிளை வீடு,தோட்டவாரம், குன்னத்தூர் கிராமம், புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம். பெயர் தெரியாத ஒரு தாய், சந்தை வியாபாரம் செய்தமூதாட்டி. திரு. சி. பப்பு பணிக்கர், மரக்கறிவிளாகத்து புத்தன் வீடு,காளைச்சந்தை, தொடுவட்டி, மார்த்தண்டம் அஞ்சல்,விளவங்கோடு வட்டம்.
1948-துப்பாக்கிச் சூட்டில் உயிர் துறந்தவர்களான எ. தேவசகாயம் நாடார்,எஸ் .டி . மங்காடு, விளவங்கோடுவட்டம் (12.02.1948)பி. செல்லைய்யன் நாடார், பெரியவிளை, கீழ்குளம்,விளவங்கோடு வட்டம் (14.02.1948). ஆகிய கன்னியாகுமாரி மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 தியாக தீபங்களுக்கும் வீரவணக்கங்களும் திருத்தணி , குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடி மீட்டுத் தந்த தியாகச் செம்மல்களின் சர்வபரி தியாங்களையும் , கீர்த்தியை நினைவில் கொள்வோம்,! அவர்களின் புகழ் ஓங்குங்க !