சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கொரோனாவின் தாக்குதலுக்கு தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், உயிரிழப்பும் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில்,  உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக, அவர் சிகிச்சை பெறும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஏற்கனவே 2 முறை கொரோனா பரிசோதனை செய்தும், தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்,  கொரோனா உறுதியானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.