சென்னை: தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (20ந் தேதி) நந்தனம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பா.முருகேஷ், செயலர் மற்றும் பணியாளர் அலுவலர் பா.கணேசன், பா.கண்ணன், தலைமை பொறியாளர் (நகரம்), இரா.சரவணன், தலைமை பொறியாளர் (ஊரகம்) மற்றும் வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களான 26,903 அலகுகள் கொண்ட 40 சுயநிதி திட்டங்கள், 3 வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 38 மனை மேம்பாட்டுத் திட்டங்கள், 22 வணிக வளாக திட்டங்கள், 10 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 2 குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான திட்டங்கள் மற்றும் 5 வைப்பு நிதி திட்டங்கள் ஆகிய அனைத்து திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு  நடத்தப்பட்டதாகவும்,  விரைவில் பணிகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.