சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட வருகின்றனர்.
தொற்று பரவலை தடுக்க 45வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை உடனே போட்டுக்கொள்ளும்படி மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 45 மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட வருபவர்களை திருப்பி அனுப்பி வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பபாடு இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். மேலும், வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என தமிழக அரசும் ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பபாட்டை போக்க உடடினயாக மேலும் தடுப்பூசிகள்  தேவை என மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. கடிதத்தில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டு உள்ளது.