சென்னை:
மிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது.

உத்திரப்பிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ஏழை மாணவர்கள் கல்வி பாதிக்கும், மாணவர்கள் சிரமப்படுவதால் ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல மாணவர்களுக்கு செல்போன் இல்லை. பல கிராமங்களுக்கு ஆன் லைன் இணைப்பு கிடையாது. இதனால் அவர்கள் ஆன் லைனில் படிப்பது கடினமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வழக்கு விசாரணையில் ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது. மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை கேட்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பள்ளி கல்லூரிகள் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை 40% வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மீதமுள்ள கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. ஆனால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி சில பள்ளிகள் 100 சதவீதம் கட்டணத்தை வசூலிப்பதாகவும், 40 சதவீத கட்டணத்தை மீறி கட்டணம் கட்ட பெற்றோர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நோட்டீஸ் சில பள்ளிகளுக்கு சென்றடையாத காரணத்தால், அதற்கான அவகாசம் வழங்கி வழக்கு நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். பள்ளிகள் திறப்பதில் உள்ள சிக்கல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது