மதுரை: சத்தீஸ்கர் எல்லை பகுதியில்  நடைபெற்ற நக்சலைட் தாக்குதலில் தமிழகத்தின் மதுரை மாவட்டதைச் சேர்ந்த வீரர் பாலுச்சாமி வீர மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் நக்சல் தடுப்பு படையில் பணிபுரிந்து வந்தவர்  மதுரை பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி.  கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில்,  நேற்று சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கிய  பாலுச்சாமி வீரமரணம் அடைந்தார்.

வீர மரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களுரூ கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தரை மார்க்கமாக மதுரை பொய்கைப்பட்டிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த பாலுச்சாமிக்கு  2 ஆண்டுகளுக்கு முன்புதான்  திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பாலச்சாமி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

நமது ராணுவத்தின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமி அவர்களுக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினர் – கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.