சென்னை:

‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு!

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு” – என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் திருவள்ளுவராண்டு தொடக்கமான தமிழ்ப்புத்தாண்டு, தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அதுவே தமிழர்களது வாழ்க்கையை வளப்படுத்தும் உற்சாக மொழியாக இருக்கிறது.

தை மாதம் என்பது அறுவடைக் காலம். மக்களைக் காப்பாற்ற நெல் மணிகளை வழங்குகிறது நிலம். புத்தரிசி கொண்டு புதுப்பானையில் புதிதாக்கப்பட்ட வீட்டில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று உள்ளமும் உதடும் மகிழ்ச்சி பொங்க, பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் உன்னதமான பண்பாட்டு விழா தான் பொங்கல் திருநாள்.

சாதி,மதப் பாகுபாடு இல்லாத தமிழர் திருநாள் அது. தை முதல்நாள் இயற்கையை வணங்கும் பொங்கல் திருநாள்.

மறுநாள் மனிதர்களுக்காக உழைக்கும் மாட்டுச் செல்வங்களுக்கான திருநாள். அதுவே இந்த மானுடத்துக்கு அறத்தை வலியுறுத்திய திருவள்ளுவர் திருநாள். தமிழர்களுக்கு இதனை விட உற்சாகம் தரக்கூடிய திருநாள் வேறு ஏது? தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய திமுக அரசு தான், தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதையும் சட்டமாக்கியது.

பொங்கலுக்கு அடுத்தநாளை திருவள்ளுவர் நாள் என அரசு உத்தரவாக அறிவித்ததும் கலைஞர் அரசே! திருவள்ளுவர் ஆண்டு முறையையும் ஏற்றது கலைஞர் அரசே! அந்தளவுக்கு தமிழர் ஆட்சியை நடத்தியது திமுக.

அத்தகைய தமிழர் ஆட்சியை மீண்டும் உருவாக்கும் நமது கொள்கைப் பயணத்தில் இந்த தைப் பொங்கலும் வருகிறது.

சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். மனித சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மறையச் செய்வோம். இயற்கையையும் பிற உயிரினங்களையும் காப்போம். வள்ளுவமே நம் தமிழ்நெறி என முழங்குவோம்!

இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றுவோம். பொங்கலைக் கொண்டாடுவோம். புத்துணர்வு பெறுவோம்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு

மற்றும் உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.