சென்னை:
பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.8 ஆயிரத்து 968 கோடி மதிப்பில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 லட்சத்து ஆயிரத்து 848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ.72 ஆயிரம் ஆகும். மாநில அரசின் பங்கு தொகை ரூ.48 ஆயிரம் ஆகும். இதுதவிர கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் கூடுதல் நிதியாக தமிழக அரசு ரூ.50 ஆயிரம் அளித்து வருகிறது.

இந்த தொகையுடன் சேர்த்து ஒரு வீட்டுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகையுடன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 90 நாட்களுக்கான ஊதியம் ரூ.23 ஆயிரத்து 40-ஐயும், தனிநபர் இல்ல கழிவறை கட்டும் பணிக்கு ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டேன். கட்டுமான பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாலும், மேற்கண்ட தொகை மூலம் ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட இயலாத நிலை உள்ளது ஆய்வில் தெரியவந்தது.

எனவே ஏழை, எளிய மக்களின் கனவான குடியிருப்பு வீடு கட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்டு வரும் தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த தொகையுடன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, தனி நபர் இல்லக்கழிவறை கட்ட வழங்கப்படும் தொகை ஆகியவற்றையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 (ரூ.2¾ லட்சம்) வழங்கப்படும். இதற்காக தமிழக அரசால் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவர்.

இந்த கூடுதல் நிதி உதவியால் கட்டி முடிக்காமல் உள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு கழகத்தின் உதவியோடு வீடுகளை கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.